அனாதையாக, ஆதரவில்லாமல் வாழும் குழந்தைகளுக்கு சமர்ப்பணம்.
கடவுளின் பார்வையில் (படைப்பில்) மலர்களானாலும்
அந்த கடவுள் தொடுத்த குடும்பம் எனும் மாலைக்கு,
முகவரி அறியா உதிரி மலர்கள் தான் நாங்கள்.
சோலை நா(தே)டும் பாலைவனப் பறவையாக
தாகப் போர் செய்யும் எங்களுக்கு,
எப்போதாவது தற்காலிக சொந்தங்களாய்
தாலாட்ட வரும் உறவுகளும் கூட கானல் நீராய்.
கந்தல் ஆடையும், கால் வயிற்றுக் கஞ்சியுமே
எங்களுடன் அங்கீகாரம் பெற்ற முத்திரைகளாய்.
ஊசிமுனையில் கோர்க்கப்பட்ட
உதிரிகள் சங்கமித்த மாலையாய் சில பூக்கள் மட்டுமே
விடுதியில் சம்பரதாயக் கேள்விகளுக்கு பதிலாக.
சிலர் பொழுது போக்கு பயணம் போக
பளிங்கு சாலை அமைக்கையில்,
எங்கள் வாழ்க்கை-
மழை வந்தால் கரைந்து போகும்
சாலையோர நடைபாதை பயணமாய்.
மணல்கயிறு திரிக்க முயற்ச்சித்து
சிலர் வீணாக்கும் பணமோ, மனமோ இந்த
விருட்சத்தின் முகவரி விதையில்,
பாலின் முகவரி பசுக்காம்பில்,
ஊமையின் முகவரி மௌனத்தில்,
ஊமைகளாய் மாற்றப்பட்ட எங்கள்
வாழ்க்கையின் முகவரி எங்கே ?
உயிர் கொடுத்து கருவறுத்தல் இதுதானோ?
எங்கள் முகவரி (கருவறை) தாங்கிய
தாயுள்ளம் எங்கே ? ? ? ,,
முகவரி தொலைத்த முகில் கூட்டம்
தன் பயணத்துக்கு காற்றை
இணைத்ததாய் எங்கள் தனிமை
உணர்வுகள் சேர்த்துக் கொண்ட எங்களின் துக்கம்.
மறுபிறவி வருமேயானால்
அனாதை என்ற வார்த்தை மற்றும் எங்களுக்காக
அனாதையாக்கப் படவேண்டும.
எங்கள் நிலை காணும் , சிலர்
உதிரத்தில் உறைந்த உணர்வுகளை
துயில் எழுப்பத் துடிக்கும் அவர்கள்
இரத்த அணுக்கள் சந்திக்கும்
ஒவ்வொரு கணமும்.
அனாதையாக வடிக்கப் பட்ட சிற்பங்களுக்கு ( கோயில் கருவறை) முகவரி கிடைக்க ஏங்கும் என் உள்ளத்தின் சத்திய வாக்குமூலம்.
மகேஷ்.......
மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும். இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....










